தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்

தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டு்ப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

தென்னக ரெயில்வே சார்பில் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், வருகிற 22-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06030) நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6.25 மணிக்கு கோவைக்கும், 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் சென்றடைகிறது.

நிற்கும் இடங்கள்

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06029) மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், ஒரு பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாராந்திர சிறப்பு ரெயில் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படுவதால், வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, 10 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டவுடன் கட்டணம் உயர்ந்துவிடும்.
இருக்கைகளின் எண்ணிக்கை குறையும் போது, கட்டணம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here