புளியங்குடி: வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யானை உயிரிழப்பு


புளியங்குடி அருகே வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் `பீட்’ மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் புளியங்குடி வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானைகள் கூட்டமாக நின்று பிளிரி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் யானை படுத்திருப்பதை பார்த்தனர். யானைகள் கூட்டமாக சுற்றி நின்றதால் வனத்துறையினரால் அந்த பெண் யானை அருகில் செல்ல இயலவில்லை.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு புளியங்குடி வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மாவட்ட வன அலுவலர் முருகன் புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருடன் புளியங்குடி வனச்சரகர் கார்த்திகேயன், வனவர்கள் மகேந்திரன், குமார் மற்றும் களக்காடு முண்டந்துறை வன காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள் அருண்குமார், கருப்பையா, நெல்லை உதவி வன பாதுகாவலர் ஷா நவாஸ் கான் ஆகியோர் சென்றனர்.

அங்கு சத்தம் எழுப்பி சுற்றி நின்ற யானைக் கூட்டத்தை விரட்டினர். பின்னர் படுத்திருந்த அந்த பெண் யானையை பரிசோதித்தனர். அப்போது அந்த யானை உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பலகீனத்துடன் காணப்பட்டது தெரிய வந்தது. அந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும். அதைத்தொடர்ந்து அந்த யானைக்கு முதலுதவி சிகிச்சைகளும், சோர்வைப் போக்கும் மருந்துகளும் அளிக்கப்பட்டன. மேலும் தென்னை ஓலை, மண்டைவெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக பரிசோதித்தும், கண்காணித்தும் வந்தனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அங்கு யானை கூட்டங்கள் திரண்டது. இதனால் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் சோர்வடையாமல் இருக்க மருந்துகள் வழங்கிய வனத்துறை ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

மீண்டும் இன்று காலை அங்கு சென்றபோது யானைகள் கூட்டமாக அங்கு நின்றதால் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை கலைந்து போக செய்தனர். பின்னர் படுத்திருந்த யானையை பரிசோதித்தபோது அந்த யானை இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய அதன் உடலை இன்று அந்த பகுதியிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதன்பின்னர் யானையை அந்த காப்புக்காட்டிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை டாக்டர்கள் கூறுகையில், யானைக்கு 40 வயதாகிவிட்டது. அதன் கால், உடல், வயிறு உள்ளிட்ட எந்த பாகங்களிலும் எவ்வித காயங்களும் இல்லை. ஒருவேளை அதன் பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சாப்பிட முடியாமல் யானை இறந்திருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் கடைசி கால கர்ப்பம் நடந்திருக்க கூடும். அதாவது யானையின் வயிற்றில் குட்டி இருந்து, அதனை பெற்றெடுக்க முடியாமல் வலியில் யானை உயிரிழந்திருக்கலாம். அல்லது அதன் ரத்தத்தில் ஏதேனும் விஷம் கலந்து இறந்ததா என்பதும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்த பின்னரே யானையின் இறப்புக்கு இறுதியான காரணம் தெரியவரும் என்றனர்.

இதையும் படிக்கலாமே: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here